சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், பஞ்சாப் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளன. இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது. ஐதராபாத் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ரஷீத்கான், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங் அகர்வால், நிக்கோலஸ் பூரன், முகமது ‌ஷமி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

பஞ்சாப் அணியில் கே எல் ராகுல்,மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர்கள். பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் தோற்றது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இரு அணிகளும் மோதிய போட்டியில் ஐதாராபாத் 10-ல், பஞ்சாப் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.