மும்பை அணியை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றபோது, சன்ரைசரஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐதராபாத் 15 ஓவரில் 137 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.