மும்பைக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது தெரியாது - மார்கஸ் ஸ்டாய்னிஸ்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் கேட்டதும் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸை தொடக்க வீரராக களம் இறக்கி ஷ்ரேயாஸ் அய்யர் ஆச்சர்யம் அளித்தார். ஸ்டாய்னிஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 27 பந்தில் 38 ரன்கள் விளாசினார். அத்துடன் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி, டெல்லி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இதனால் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில், நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவது குறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில், நான் சில சீசனில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளேன். டாப் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்தது. இது எப்படி போகும் என்று யாருக்கும் தெரியாது என்று கூறினார்.

மேலும் அவர், முதலில் ஸ்விங் இருந்ததால் பொறுமையாக விளையாடினோம். அதன்பின் நானும், தவானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தோம். இறுதிப் போட்டியில் நான் தொடக்க வீரராக களம் இறங்குவேனா? என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை. எல்லா இடத்திலும் நான் பேட்டிங் செய்து வருகிறேன். ரிக்கி பாண்டிங்கிடம் பேசிய பின்னர்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நான் போதுமான அளவிற்கு ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளேன். இதுதான் எனக்கு முதல் இறுதிப் போட்டி. கோரன்டைனில் குடும்பத்தை பிரிந்து விளையாடுவது மிகவும் கஷ்டம். மும்பை சிறந்த அணி. அவர்கள் ஒரு போட்டியில் விளையாடாமல் உள்ளனர் என்பதை சொல்ல விரும்புவேன். எங்களுடைய சிறந்த ஆட்டம் போட்டியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அவர்களை வீழ்த்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்தார்.