கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி துவங்கியது - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்று நட்சத்திர ஏரி. இங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், கொடைக்கானல் நகராட்சி மற்றும் தனியார் சார்பில் நட்சத்திர ஏரியில் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டன. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதுகிறது.

அதேநேரத்தில், முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்த படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நேற்று முதல் தொடங்கப்படும் என்று சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 9 படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்தனர். 8 மாதங்களுக்கு பிறகு நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.