பயணத்தின் போது உடல் உபாதைகளால் அவதி படுகிறீர்களா?

அனைவருக்கும் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், பயணம் செயாதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. இதில் இருக்கும் சுவாரசியம் மற்றும் உங்கள் மனதிற்கு கிடைக்கும் புத்துணர்சியை பற்றி விவரிக்க முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவத்தை பொறுத்தே இருக்கும்.

பேருந்து, கார், தொடர் வண்டி அல்லது வேறு எந்த விதமான வாகனமாக இருந்தாலும், பயணம் செய்வது என்பது சுவாரசியமான தருணமே. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் உங்கள் பயணத்தை இனிமையானதாகவும் அல்லது மோசமானதாகவும் மாற்றக் கூடியது, பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்.

சிறியவர்களோ, பெரியவர்களோ, ஒரு சிலருக்கு பயணம் என்று வந்து விட்டாலே, வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போது பல உடல் நல பிரச்சனைகளை சந்திபார்கள். அது அவர்களுக்கு அதிக அசௌகரியத்தைக் கொடுக்கும். மேலும் இதனால் அவர்கள் பயணம் முடிந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற பின் அதிகம் சோர்வோடும், உற்சாகம் குறைந்தும் காணப்படுவார்கள். மேலும் அவர்களது பயணத்தை முடித்து வீடு திரும்பும் போது அதிக சோர்வோடு, இனி பயணமே செய்யக் கூடாது என்ற தீர்மானத்தோடு வருவார்கள்.

உங்களுக்கு ஏன் பயணத்தின் போது உடல் உபாதை ஏற்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டால், எளிதாக அதனை சமாளிக்க ஒரு நல்ல தீர்வை கண்டு பிடித்து விடுவீர்கள். பலருக்கும் சமமான நிலப் பரப்பில் பயணம் செய்வதை விட மலைப் பகுதிகளில் பயணம் செய்யும் போது அதிக அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. இது குறிப்பாக தட்ப வெட்ப நிலை மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றது. எந்த நில பரப்பாக இருந்தாலும், நீங்கள் எளிதாக உங்களுக்கு ஏற்படக் கூடிய உடல் உபாதைகளில் இருந்து விடு படலாம்.

பயணத்தின் போது உங்களுக்கு ஏற்படும் சில உடல் உபாதைகளை நீங்கள் எளிதாக சரி செய்து விடலாம். அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். அது உங்கள் பயணத்தை நிச்சயம் மகிழ்ச்சியாக்குவதோடு, நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

பயணத்தை தீர்மானிக்கும் முன் எந்த வாகனம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் பெரும் அளவு உங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சமாளித்து விடலாம். நீங்கள் ஒரு குழுவாக வழிகாட்டியோடு பயணம் செய்தால், அவரிடம் உங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை முன் கூட்டியே தெரியப் படுத்துவது நல்லது. அவர் உங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் பிற பொருட்களை தயாராக வைத்திருப்பார். உங்களுடன் நீங்கள் ஒரு சில பொருட்களை எடுத்து செல்வது நல்லது. மேலும் அவற்றை நீங்கள் எளிதாக எடுக்கும் வகையில் உங்கள் கை பையிலோ அல்லது அருகாமையிலோ வைத்துக் கொள்வது நல்லது.

அவற்றில் சில, இஞ்சி மரப்பா, புளிப்பு மிட்டாய் அல்லது புளிப்பான ஏதாவது ஒரு பொருள், பிளாஸ்டிக் பை என்று மேலும் சில பயணத்தை தொடங்குவதற்கு முன் எப்போதும் சிறிது உணவாவது எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் பயணம் செய்வது நிச்சயம் உங்களுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்

வாகனத்தில் பயணம் செய்யும் போது புத்தகம் படிப்பது, கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பது மற்றும் மடி கணினியை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய செயல்கள் உங்களுக்கு தலை சுற்றல் மற்றும் தலை வலி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.

சுத்தமான காற்று உங்களை சுற்றி வருவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குளிர் சாதன வாகனத்தில் பயணம் செய்யும் போது, போதுமான காற்று சுழற்சி உள்ளே உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், ஜன்னல்களை திறந்து வைத்து சுத்தமான காற்று உங்களை சுற்றி இருக்குமாறு பயணிக்க வேண்டும்.

முடிந்த வரை உங்கள் கண்களை மூடிக் கொண்டு தூங்கி விடுவது நல்லது. அப்படி செய்யும் போது நீங்கள் எதையும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படாது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். முடிந்த வரை வாகனத்தின் சத்தத்தை கவனிக்காமல் இருப்பதற்கு வேறு ஏதாவது சத்தத்தில் உங்கள் கவனத்தை செலுத்தலாம். குறிப்பாக பாட்டுக் கேட்பது, சக பயணிகளுடன் பேசிக் கொண்டு வருவது என்று சில செயல்கள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்காமல் அவ்வப்போது இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். சில மணி நேரங்களுக்கு ஒரு முறை சற்று இடைவேளை எடுத்துக் கொண்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து ஓய்வு எடுத்துக் கொல்லுங்கள. இது நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும். சரியான நிலையில் அமர்ந்து பயணம் செயுங்கள். இதுவும் நீங்கள் சௌகரியமாக எந்த உடல் உபாதைகளும் ஏற்படாமல் பயணம் செய்ய உதவும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை பழம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். பயணத்தின் போது இஞ்சி தேநீர், எலுமிச்சை பழம் சாறு போன்றவற்றை அருந்தினால் சற்று புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இவை மட்டுமல்லாது, உங்கள் மனதையும் நீங்கள் மகிழ்ச்சியோடும், புத்துணர்ச்சியோடும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஏற்படவிருக்கும் உபாதைகளை தவிர்க்க பெரிதும் உதவும்.