அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ கொடியேற்றம்

பழனி: பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்... பழனி முருகன் கோவில் உப கோவிலான அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உப கோவிலான பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழா சிறப்பு பூஜை துவங்கியது. முக்கிய திருவிழா வரும் 10 ம் தேதி ஏழாம் நாள் திருக்கல்யாணமும், 12 ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் திருத்தேர் தேரோட்டமும், வரும் 14 ம் தேதி கொடியிறக்கம், விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி நாராயண அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடி மரம் முன்பாக சங்கு சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு ஆறு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின்பு கலச நீர் கொடி கம்பத்துக்கு தெளிக்கப்பட்டு திருக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி நாராயண பெருமாளுக்கு பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் அலுவலர்களும்,பக்தர்களும் கலந்து கொண்டனர்.