சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி

சென்னை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இக்கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எனவே அதன்படி அந்நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாதமும் விசேஷ நாட்களில் இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

அந்தவகையில், வருகிற 19-ம் தேதி சித்திரை மாத அமாவாசயை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி , சுந்தர மகாலிங்கரை தரிசிக்கலாம். அதேநேரம் 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.