சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் இந்த தேதி தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. எனவே இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று பம்பையில் நடைபெற்றது.

இதனை அடுத்து இந்த கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் அய்யப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான அய்யப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும் என அவர் கூறினார்.