கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இருக்கும் விரதம் இருக்கும் முறைகள்

கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். பொதுவாக ஒரு முக்கிய விசேஷ தினத்தின் போது, அந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் கீதையின் நாயகன் கிருஷ்ணர் அவதரித்த அருமையான கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இருக்கும் விரதம் மூலம் பல நன்மைகள் பெற முடியும். நீங்கள் உங்களின் உடல் நிலையைப் பொருத்து கீழ்காணும் விரத முறையில் ஒன்று இருந்து கண்ணனை வரவேற்கவும், அவரது அருளையும் பெறலாம்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணரின் தீவிர பக்தர்கள் இரண்டு வகையில் விரதம் இருக்கின்றனர். நீர், உணவு இல்லா விரதம் ஒருவகை. மற்றொன்று திரவ உணவு விரதம்.

நீர், உணவு இல்லா விரத முறை: கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம்.

விரதம் இருக்கும் நேரத்தில் பகவத் கீதை, கிருஷ்ணர் குறித்த பஜனைகள், பாடல்கள், கீர்த்தனைகள் இசைத்தும், விஷ்ணு போற்றியை படித்தும் தங்கள் விரதத்தை முழுவதும் கிருஷ்ணரின் மீது லயிக்க விடுவர்.

திரவ உணவுடன் விரதம்: நீர், உணவு சரியான நேரத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், உடல் நிலை பாதிக்கப்படும் என்பதால், பலர் இந்த வகையான விரதம் மேற்கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் பலர் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விரதம் இருக்க விரும்பினால் இந்த வகை விர்தம் இருக்கலாம். அந்த வகையில் இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையிலிருந்து எந்த ஒரு திட ஆகாரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், நீர், பழங்கள், பழச்சாறு, பால் போன்ற திரவ ஆகாரத்தை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

உப்பு சேர்த்த உணவுகள், நீர் ஆகாரங்கள், தானியங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக இந்த விரதத்தின் போது எடுத்துக் கொள்ளக் கூடாது. கிருஷ்ணரை முழு மனதோடு ஆராதித்து, விரதத்தில் இருப்பவர்கள், தங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்வதும் நல்லது.

இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மும்மூர்த்திகளாக பார்க்கப்படுகின்றனர். படைத்தல் தொழிலையும், விதியையும் பிரம்மா செய்ய, படைத்த உயிர்களை காக்கும் கடவுளாக விஷ்ணு பகவானும், அழிக்கும் தொழிலை சிவ பெருமானும் செய்து வருகின்றனர்.

விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். குழந்தை வர வேண்டுவோர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விரதாமாக கிருஷ்ண ஜெயந்தி விரதம் பார்க்கப்படுகின்றது.

இறைவனை முழு மனதோடு வேண்டும் என்பதை விளக்கும் விதமாக, பாஞ்சாலி துகில் உரியப்படும்போது, கையால் மானத்தை காக்க போராடிய போது காப்பாற்றாமல், இனி எல்லாம் நீயே என முழுவதுமாக சரணடைந்த போது, அவளுக்கு துயில் கொடுத்து காத்து ரட்சித்தார்.