ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரிப்பு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு விலை தொடர்ந்து குறைந்ததால் தங்கம் பவுனுக்கு ரூ.38 ஆயிரத்துக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து விலை ரூ.38 ஆயிரத்துக்கும் மேலே இருந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக உயர்வை சந்தித்தது. நேற்று பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்றது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 736-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,842 ஆக இருக்கிறது.

இன்று தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் சிறிது குறைவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.64 ஆயிரத்து 300-க்கு விற்கிறது.