தங்கம் விலை இன்று மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 17-ந் தேதி தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று 37 ஆயிரத்து 440-க்கு விற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்து மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 884 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.