தமிழகத்தில் வரும் 10ம் தேதி 1112 தியேட்டர்களை திறக்க நடவடிக்கை

1,112 தியேட்டர்கள் திறக்க நடவடிக்கை... தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு நடந்து வருவதாக தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்- அமைச்சர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களை திறக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இதில் 400 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அடங்கும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அமர்ந்து திரைப்படங்களை திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய முறைப்படியே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.