நடிகை காஜல் அகர்வால் மிக எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு

நடிகை காஜல் அகர்வால் மிக எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் அக்டோபர் மாதம் 30ம் தேதி எனக்கும், கவுதம் கிட்ச்லுவுக்கும் மும்பையில் திருமணம் நடக்கும் என்று காஜல் அகர்வால் டுவீட் செய்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் காஜலின் வீட்டில் தான் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு இல்லை என்றும், இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் மட்டுமே கலந்து கொள்ளவார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு கூட்டம் சேர்த்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.