நடிகை நயன்தாரா சம்பளத்தை குறைத்து இருப்பதாக தகவல்!

மலையாளத்தில் தயாராகும் திகில் படத்தில் நடிக்கும் நயன்தாரா சம்பளத்தை குறைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பினால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனி தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் தலா ஒரு கோடியை குறைத்துக் கொண்டார்.

இதுபோல் நடிகர் ஹரிஷ் கல்யாண், டைரக்டர் ஹரி உள்ளிட்டோரும் சம்பளத்தை குறைத்தனர். மலையாள நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் திரிஷ்யம் படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளார். இதே படத்தில் நடிக்கும் மீனாவும் சம்பளத்தை குறைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தனது சம்பளத்தை குறைத்துள்ளார். மலையாளத்தில் தயாராகும் நிழல் என்ற திகில் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு சம்பளத்தை நயன்தாரா குறைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நயன்தாரா தமிழில் ரூ.4 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.