திருமணம் பற்றிய வதந்திகளுக்கு புல் ஸ்டாப் வைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்

சென்னை: என்னுடைய திருமணம் குறித்து நிறைய வதந்திகள் பரவி வருகின்றன என்று நடிகை ரகுல் ப்ரீத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது.
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே. என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன.

இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தி தயாரிப்பாளரான ஜாக்கி பத்னானியை காதலித்து வருகிறார். இதை அவரே கூறியிருந்த நிலையில் தற்போது இவர்கள் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் உலாவந்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து கேட்டதற்கு பதில் அளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், என்னுடைய திருமணம் குறித்து நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான், நான் என்னுடைய காதலை முன்பே சொல்லிவிட்டேன்.

ஆனாலும் நான் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. தற்போது மீண்டும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறுகிறார்கள். ஆக மொத்தம் எனக்கு இரண்டு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.