நடிகை தமன்னா கொரோனாவில் இருந்து மீண்டார்!

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நடிகை தமன்னா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தமன்னா தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

வெப்தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த தமன்னாவுக்கு திடீரென கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை பெற்ற அவர் தற்போது முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

நானும் எனது படக்குழுவினர்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். அப்போது கொரோனா சோதனைகளை மேற்கொண்டபோது நான் கோவிட் -19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டேன். இதனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் இருந்த நான் தற்போது குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன்.

மேலும் டிஸ்சார்ஜ் ஆனபோதிலும் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தமன்னா தெரிவித்துள்ளார்.