அப்புக்குட்டி நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டியிருப்பதால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், யோகிபாபுவின் காக்டெயில், வரலட்சுயின் டேனி ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது அந்த வரிசையில் அப்புக்குட்டி நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து அப்புக்குட்டி கூறியதாவது:- நான் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவருகிறது. அதுவும் ஆன்லைன் தளத்தில் வெளிவர இருக்கிறது. ஒன்பது குழி சம்பத் திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், யதார்த்த சினிமாக்களால் திரைக்குள் ஈர்க்கப்பட்டு, சரவண சுப்பையாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜா.ரகுபதி இயக்கத்தில், நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இத்திரைப்படத்தில் நாயகனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார்.

புதுப்படம் வெளியாகிறது என்றால் அது திரையரங்கில்தானே, கொரோனா காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று கேட்டால், தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற ஆப்ஸினை உருவாக்கி, அதை ஒரு ஆன்லைன் தியேட்டராக மாற்றி இருக்கிறார்.

இந்த ஆன்லைன் தியேட்டரில் வாரம் ஒரு புதுப்படம் வெளியாகும். அப்படம் வெளிவரும் சமயத்தில், ஆன்லைனில் டிக்கெட் வாங்கி, உங்கள் வீட்டிலேயே அமர்ந்து, ஒரு டிக்கெட்டில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு மகிழலாம். இதுதான் ஆன்லைன் தியேட்டர்.

ஆகஸ்ட் 15-அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் ஆன்லைன் தியேட்டரில் எங்களின் ஒன்பது குழி சம்பத் திரைப்படம் வெளியாகிறது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கி படத்தைப் பாருங்க. நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் சினிமா வளரும் என்றார்.