ரேப் செய்தால் உடனடியாக மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் - நடிகை வரலட்சுமி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்ரியா என்பவரை 3 காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அடித்தே கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு இந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து நேற்று அறிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாலியல் பலாத்காரம் செய்பவர்களை உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகம் இந்த சட்டத்தை இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ரேப் செய்தால் உடனடியாக மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நிறுத்தப்படும். எனவே இந்த சட்டம் இயற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று அவரை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.