தனது கனவு படம் குறித்து தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: லோகேஷ் கனகராஜ், தன் கனவுப்படமாக ’இரும்புக் கை மாயாவி’ படம் பற்றி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், தன் கனவுப்படமாக ’இரும்புக் கை மாயாவி’ படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மாநகரம் திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் ’இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால், இது சூப்பர் ஹீரோ கதை என்பதால் படத்தின் உருவாக்க சவால்களால் அதனைக் கைவிட்டார். தற்போது, இதுகுறித்து பேசியதுடன் இது உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.