நடிகர் விஜயகாந்த் குறித்து பெருமிதமாக பேசிய இயக்குனர் செல்வமணி

சென்னை: நடிகர் விஜயகாந்தை திரைப்பட கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தெய்வமாக கொண்டாட வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசினார்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 77வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.

நிலப்பட்டா உள்ளிட்ட இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டது. அதனை அனைவரும் கண்டு களித்தனர். பின்னர் திரைப்பட துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு ஆண்டு மலரும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ”யார் சொல்வதையும் கேட்காதீர்கள், உங்களுக்கு எது சரி என தெரிகிறதோ அதை செய்யுங்கள், சரியான கருத்தை கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு உதாரணம், நடிகர் விஜயகாந்த் படத்தை இயக்கிய போது ஒரு பிரச்னை வந்தது.

விஜயகாந்த் என்னிடம் கூறினார், நீ யார் சொல்வதையும் கேட்க வேண்டாம், எனக்கு இந்த படம் தோல்வியடைந்தால் 10வது படம் தோல்வி அவ்வளவு தான், அடுத்த படங்களில் எனது இடத்தை பிடித்து விடுவேன். ஆனால், இது தான் உனக்கு முதல் படம், இதில் தோற்றால் இதான் உனக்கு கடைசி படம்.

ஈகோவை வைத்துக் கொண்டு நல்ல விஷயம் யாராவது சொன்னால் செய்யமாட்டேன். நான் நினைத்ததை தான் செய்வேன். யார் சொல்வதையும் கேட்க மாட்டேன் என்று சொல்லாதே, நல்லதை சொன்னால் கேட்டுக்கொள். அதே அறிவுரையை உங்களுக்கு சொல்கிறேன் எது சிறப்போ அது நல்லா இருக்கும் நினைக்கிறீங்களோ அதை செய்யுங்கள். நடிகர் விஜயகாந்தை இங்கு படிக்கும் மாணவர் தெய்வமாக கொண்டாட வேண்டும்” என்றார்.