விஜய்யின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்; இயக்குனர் வெற்றிமாறன்

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடித்த பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அதன் பின்னர் இந்த 13 ஆண்டுகளில் அவர் இயக்கிய மொத்த திரைப்படங்கள் 5 மட்டுமே. அதில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களும் தனுஷ் நடித்தது என்பதும் தனுஷ் நடிக்காத திரைப்படமாக இருந்தாலும் ’விசாரணை’ படம் தனுஷின் தயாரிப்பில் உருவானது.

இந்த நிலையில் முழுக்க முழுக்க தனுஷுடன் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்த இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக மற்ற நடிகர்களின் படங்களையும் இயக்கி வருகிறார். சூரி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ள வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றிமாறன் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வெற்றிமாறன், முதலில் சூரி படத்தை முடித்துவிட்டு அதன்பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் பணியை தொடங்க போவதாகவும் அதற்கு அடுத்தபடியாக விஜய்க்காக கதையை தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்றும் விஜய்யின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் ஏற்கனவே ஷாருக்கானுக்கும் வெற்றிமாறன் கதை சொல்லியுள்ளார் என்பதும் ஷாருக்கானிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.