விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் இருந்து கதாநாயகி திடீர் விலகல்

விஜய் சேதுபதி தற்போது 'துக்ளக் தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தப்படத்தில் கதாநாயகியாக காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்துள்ள அதிதிராவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.

தற்போது ஊரடங்கு தளர்வால் துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி விட்டார்.

கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் தற்போது இன்னொரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும், இதனாலேயே விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிதிராவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராஷிகன்னாவை தேர்வு செய்துள்ளனர். இதில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.