கோழிக்கோடு விமான விபத்து: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. கேரளாவின் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தமிழர்கள் உள்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

கேரளாவில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற விமான விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்விற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விபத்து குறித்த இரங்கல் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.