காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பூங்காவில் பிரபல நடிகர் வினோத் தாமஸ் காரில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதனை பூங்காவுக்கு வந்த பலரும் பார்த்துள்ளனர். ஆனால் அந்த நபர் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்தபோது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக இருந்தது பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது. அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர் வினோத் தாமஸ். இவர் ஒருமுறை வந்து பார்த்தா, நெத்தோலி ஒரு செரிய மீன்ல்ல, ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. காரின் ஏசியில் இருந்து ஏதேனும் விஷவாயு கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாத வினோத் தாமசின் உடல் தற்போது பாம்பாடி தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.