சூப்பர் ஸ்டாரை இயக்குவதுதான் என் கனவு... இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தகவல்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. ஆனால் இப்போது அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியவில்லை. கூடிய விரைவில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எப்படியாவது சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்று ஒரு இயக்குனர் அவரை தொடர்ந்து பாலோ செய்து கொண்டிருக்கிறாராம். துல்கர் சல்மான் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. விஜய் டிவி ரக்சன், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தேசிங்கு பெரியசாமி அந்த படம் வெளியான பிறகு அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படம் அருமையாக இருப்பதாக படக்குழுவினரை பாராட்டினார். இது அனைத்து ஊடகங்களிலும் அப்போது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது.

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்க போகிறார் என்ற செய்தியும் வெளிவந்தது. ஆனால் ரஜினி, சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதை தொடர்ந்து அவர் அடுத்த படத்தை நெல்சனுக்கு கொடுத்து விட்டார். இந்நிலையில் தேசிங்கு பெரியசாமியிடம் சூப்பர் ஸ்டாரை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. ஆனால் இப்போது அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியவில்லை.

கூடிய விரைவில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். தற்போது வேறு ஒரு கதையில் பிசியாக இருக்கும் அவர் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இளம் இயக்குனர்களின் கதையில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.