மகனோ சிறையில்... வாழ்க்கையோ வறுமையில்; உதவியை எதிர்பார்க்கிறார் வில்லன் நடிகர்

மகன் சிறைக்கு போக... கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளும் இல்லாமல் பிரபல நடிகர் சாப்பாடுக்கே அவதிப்பட்டு வருகிறார்.

பெண்ணை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பிரபல வில்லன் நடிகர் சூர்யகாந்த் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

கிழக்கு சீமையிலே படத்தில் தனது மகனை ஊதாரியாக இருப்பதற்கு அறிவுரை கூறும் பொறுப்பற்ற தந்தை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் வில்லன் நடிகர் சூர்யகாந்த்.

தூறல் நின்னுபோச்சு தொடங்கி 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், அரசியலில் வலம் வந்தாலும் அவரது நிஜவாழ்க்கையில் அவரது மகன் விஜய் ஹாரீஷ் செய்த பொறுப்பற்ற செயலால் வறுமையில் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சூர்யகாந்த்.

சூர்யகாந்தின் மகன் விஜய் ஹாரீஷ் சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து வந்த கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கியதால் செலவுக்கு பணமின்றி வீட்டுக்குள் முடங்கி போனார் சூர்ய காந்த். தற்போது சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் உணவுக்கே வழியற்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திரைஉலக பிரபலங்களோ அல்லது தான் சார்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ தன் வறுமை நிலை அறிந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் நடிகர் சூர்யகாந்த்.