ரஜினி, அஜித்தை தொடர்ந்து சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சூப்பர் ஸ்டார் நடித்து வரும் அண்ணாத்த’, அஜீத் நடித்து வரும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னரே ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் தன்னுடைய அடுத்த திரைப்படமான ’அருவா’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ’அருவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பின்னரே ’அருவா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக சூர்யா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி, அஜித் மற்றும் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் திரைப்படங்களான ’அண்ணாத்த’ ’வலிமை’ மற்றும் ’அருவா’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.