ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி வெளியீட்டாக வந்தன. இதனால், 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையரங்க வெளியீடாக வந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன.

இப்படம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றதால் படக்குழுவினர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.