நிபந்தனையுடன் விபிஎப் கட்டணத்தை ஏற்று கொள்வதாக அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து தியேட்டர்கள் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருப்பதால் திரையரங்குகள் திறந்தும் ரசிகர்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்காது. திரையரங்குகளில் புது படங்கள் ரிலீசானால் மட்டுமே பார்வையாளர்கள் ஓரளவிற்கு திரையரங்குக்கு வருவார்கள் என்றும் பழைய படத்தை பார்க்க 10 சதவீத பார்வையாளர்கள் கூட வருவது சந்தேகம் என்பதால் திரையரங்குகள் திறந்தும் பிரயோஜனம் இல்லை என்றும் கூறப்படுகிறது

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கை என்பது விபிஎப் கட்டணத்தை திரையரங்குகளே ஏற்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் விபிஎப் கட்டணத்தை ஏற்க முடியாது என்பதும் தான். ஆனால் இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விபிஎப் கட்டணத்தை நாங்கள் ஏற்று கொள்கிறோம், ஆனால் பட வசூலில் 50 சதவிகிதம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையை திரையரங்கு உரிமையாளர்கள் முன் வைத்துள்ளனர். இந்த நிபந்தனை எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.