நாளை 10ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் த்ரிஷாவின் தி ரோடு படம்

சென்னை: தி ரோடு திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா மையக் கதாபாத்திரமாக நடித்த “தி ரோடு” திரைப்படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியிருக்கிறார். இதில், நடிகர்கள் மியா ஜார்ஜ், சார்பட்டா பரம்பரை சபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வினோத் சாகர் என பலர் நடித்திருக்கின்றனர்.

தனது குடும்பத்தினரை உயிராக நேசிக்கும் த்ரிஷா, அவர்களை ஒரு சாலை விபத்தில் இழக்கிறார். அதனால் துவண்டு மன உளைச்சலில் தத்தளிக்கும் அவர் தனது கணவனும், மகனும் மரணித்த சாலைக்கு செல்ல அங்கு அதற்கு முன்பே பலரும் இவ்வாறு மரணித்திருப்பதை அறிந்து கொள்கிறார்.

குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையில் எப்படி தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன என்பதை தேடி அலையும் அவருக்கு பல அதிர்ச்சிகர உண்மைகள் தெரிய வருகின்றன.

அதன்மூலம் தனது குடும்பத்தின் இறப்புக்கு காரணமானவர்களைத் தேடத் தொடங்குகிறார். அந்தத் தேடல் என்ன ஆனது என்பதை முழுநீளத் திரைப்படமாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக கவனம் பெறவில்லை. இந்நிலையில், இப்படம் நாளை 10ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.