விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிப்பு; கைது செய்ய நடவடிக்கை

நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகள் குறித்து மிகவும் வக்கிரமாக டுவிட்டரில் விமர்சனம் செய்த ரித்திக் என்பவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருந்து டுவீட் செய்ததை கண்டுபிடித்தது சைபர் கிரைம் போலீஸ். இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.