எதிர்ப்பை மீறி நடிக்க விஜய்சேதுபதி முடிவு

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் எதிர்ப்பை மீறி நடிக்க விஜய்சேதுபதி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால் படத்துக்கு 800 என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமை என்று விஜய் சேதுபதியும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டு சிங்களர்களின் பக்கம் நின்றவர். எனவே அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா அல்லது விலகி விடுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்க விஜய்சேதுபதி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான திரைக்கதையும் தயாராகி விட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ்.ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பட வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.