மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியில் இருந்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.59 அடியாக உயர்ந்தது. இதனிடையே நேற்று இரவு 8 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து நீர்மட்டம் 98.91 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும், நீர் இருப்பு 63.55 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.