நடிகை கஸ்தூரிக்கு சம்பளம் கொடுத்து விட்டோம்; விஜய் டிவி நிர்வாகம் பதிலடி

பிக்பாஸில் கலந்து கொண்டதற்கான தொழில் முறை சம்பளம் 2019 டிசம்பர் மாதத்திலேயே கஸ்தூரிக்கு வழங்கப்பட்டு விட்டது. அதற்கான ஜிஎஸ்டி தொகை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விஜய் டிவி நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது.

2019ல் விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டது குறித்து தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதன்படி விஜய் டிவி இன்னும் அதற்கான சம்பள பாக்கியைத் தரவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குக் காரணமே, ஆதரவற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவுகளுக்காகத்தான். என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பொறுப்பான ஒரு தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் இதுவரை ஒப்பந்த படி அனைவருக்கும் சரியான முறையில் சம்பளம் கொடுத்துவிடுவது வழக்கம். அதே போல் பிக்பாஸில் கலந்துகொண்டதற்கான தொழில்முறை சம்பளம் 2019டிசம்பர் மாதத்திலேயே கஸ்தூரிக்கு வழங்கப்பட்டு விட்டது.

அதற்கான ஜிஎஸ்டி தொகை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகே அந்த தொகை வழங்கப்படும். இது தவிர விஜய் டிவியில் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கான கட்டண தொகையையும் சேர்த்து அளிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.