பித்தத்தை விரட்டி அடிக்க இயற்கை மருத்துவ முறைகளே போதும்!!!

சென்னை: பித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள் ஏராளமாக வழிகள் உள்ளன. அதில் சில உங்களுக்காக.

இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். மாம்பழத்தை பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும். எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்றை செய்து வர பித்தம் நீங்கி, உடல் நல்ல நிலைக்கு மாறும்.