ஊரடங்கிற்கு பின் மீண்டும் ஜிம்முக்குசெல்லும் போது எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..?

ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும் போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும்போது, சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட இடைவெளிவிட்டுஉடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும். ஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும். ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 - 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 - 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். ஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 - 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம்.