40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறையை சிந்திக்கும் பெண்கள்

வழக்கமாக 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் வேலையில் சேர்ந்தால், 60 வயது வரை தொடர்ச்சியாக உழைப்பார்கள். பணியில் இருக்கும் காலகட்டத்தில் பலருக்கும் ஊரும், உறவுகளும் நினைவில் இருப்ப தில்லை. வேலை- பணம் என்ற இரண்டு எல்லைக்கோட்டிற்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும். வங்கி கணக்கிலும் பணம் ஏறிக்கொண்டிருக்கும். சரியாக ஓய்வுகூட எடுக்கமாட்டார்கள். நேரத்துக்கு சுவையாக சாப்பிடவும் மாட்டார்கள்.

இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கிறாயே.. நல்லா சாப்பிட்டால் என்ன.. நாலு இடத்துக்குபோய் சொந்தபந்தங்களை பார்த்தால் என்ன.. என்று கேட்டால், அதற்கு பதிலாக, அறுபது வயது வரை உழைக்கவேண்டும். எவ்வளவு பணத்தை சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்த்துவிடவேண்டும். அதன் பின்பு நன்றாக உட்கார்ந்து சாப்பிடுவேன். நான்கு இடங்களை சுற்றிபார்ப்பேன். சொந்த பந்தங்களை எல்லாம் தேடிப்போய் சந்திப்பேன். எல்லாம் 60 வயதுக்கு பிறகுதான் என்று கூறுவார்கள்.

உண்மையில், அறுபது வயதில் அவர்கள் ஓய்வுபெறும்போது நாடிநரம்பெல்லாம் தளர்ந்துபோகும். உடலில் பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். விரும்பியதை சாப்பிடமுடியாது. விரும்பிய இடங்களுக்கு செல்ல உடல் ஒத்துழைக்காது. பணம் மட்டுமே இருக்கும். உடல் நலம் உள்பட மீதி அனைத்தையும் இழந்திருப்பார்கள். 60 வயது வரை வீடு-அலுவலகம் என்று ஓடிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பின் வீடு-மருத்துவமனை என இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

இதனால் தற்போது இளந்தலைமுறையினர் 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று கருதும் அவர்கள் 40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறார்கள். இதனால் 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, வாழ்க்கையை புதிய பாதையில் திருப்பிவிடவேண்டும் என நினைக்கிறார்கள். இந்த சிந்தனை செயல்திட்டத்திற்கு ‘பினான்சியல் இன்டிபென்டன்ட், ரிட்டயர் ஏர்லி’ என்று கூறுகின்றனர்.

இந்த திட்டத்திற்கு தக்கபடி வாழ்வதற்காக இன்றைய இளையதலைமுறையினர் 25 வயதுகளிலே கடுமையாக உழைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். கண்டபடி பணத்தை செலவிடாமல் எளிமையாக வாழ்ந்து, பணத்தை சேமிக்கும் வழிமுறைகளையும் கையாளுவதால், 40 வயதுக்குள் நல்ல நிலைமையை அடைகின்றனர்.