உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 19 லட்சம் பேர் குணம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வருகின்றனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 60 லட்சத்து 79 ஆயிரத்து 74 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 437 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 374 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 1 கோடியே 19 லட்சத்து 9 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.