செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 12.00 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது. ஏற்கனவே நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஏரியிலிருந்து இன்று மதியம் 12.00 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.