ஆன்லைனில் பாடம் படிக்க செல்போன் இல்லை... 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி அடுத்த காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 16), மகன் தனுஷ் (11). இதில் ஸ்ரீநிதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். தனுஷ் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஸ்ரீநிதியும், தனுசும் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படித்து வந்தனர். வீட்டில் உள்ள ஒரே ஒரு செல்போனில் 2 பேரும் படித்து வந்தனர். இதனால் தினமும் முதலில் அந்த செல்போனை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக அக்காள், தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. கடந்த 7-ந்தேதி இருவருக்கும் இடையே செல்போனில் பாடம் படிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அவரது பெற்றோர் ஸ்ரீநிதியை கண்டித்தனர். ஆன்லைனில் பாடம் படிக்க செல்போன் இல்லையே என்று மனமுடைந்த ஸ்ரீநிதி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டாள்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீநிதி பரிதாபமாக இறந்தாள்.