குமரிகடலில் மணிக்கு 110கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது இன்று காலை வலுவடைந்து புயலாக மாறியது. மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகல் கரையை கடக்க உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றம் மற்றும் தொடர்மழை காரணமாக கன்னியாகுமாரி மாவட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையில் நிவர் புயல் காரணமாக கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் 350 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுக கடல் பகுதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் பிற கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களின் கட்டுமரங்கள், வள்ளங்கள் அனைத்தும் அந்தந்த கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.