ஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரெயிலில் 19 லட்சத்து 21 ஆயிரத்து 962 பேர் பயணம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதமாக பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த மாதம் 30-ந்தேதி வரை 19 லட்சத்து 21 ஆயிரத்து 962 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 8 லட்சத்து 58 ஆயிரத்து 546 பேர் பயணம் செய்தனர்.

அதிகபட்சமாக கடந்த மாதம் 23-ந்தேதி 38 ஆயிரத்து 615 பேர் பயணித்தனர். இதில் பயண அட்டையை பயன்படுத்தி 4 லட்சத்து 72 ஆயிரத்து 27 பேர் பயணித்தனர். அதேபோல் கியுஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 21 ஆயிரத்து 579 பேர் பயணித்தனர்.

மீதம் உள்ளவர்கள் டோக்கன் முறையில் டிக்கெட்டுகளை பயன்படுத்தி உள்ளனர். இதில் கியுஆர் குறியீடு பயணச்சீட்டுக்கு 20 சதவீதமும், பயண அட்டைகளுக்கு பத்து சதவீதமும் கட்டணத் தள்ளுபடியும் வழங்குகிறது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.