கனடாவில் 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்து

கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் ஒன்று செல்லவிருந்தது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் பயணம் செய்ய ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம், தனது இளைய 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்தியது தான் என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட சகித்துக்கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என்று கூறியதாக சவுத்ரி கூறினார். அதன்பின், சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார்.

சவுத்ரியின் 3 வயது மகள் முக கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை. அப்போது நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், மேலும் தீவிரமாகி அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், போலீசாரையும் வரவழைத்தனர்.

பின்னர், தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர். ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என கூறி விட்டனர். இந்நிலையில், போலீசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றியதால், விமான சேவையும் ரத்தானது. இருப்பினும் கனடாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முக கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியதாக சவுத்ரி தெரிவித்தார்.