ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 2 பேர் கைது

தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் பெற்று வினியோகிக்கும் பணியை செய்து வருகின்றார்.

இந்த நிலையில், நிறுவனத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்ட பொருட்களை ஒவ்வொரு மாதமும் கணக்கெடுப்பது வழக்கம். அதன்படி கடந்த 1-ந் தேதியன்று பொருட்களை கணக்கெடுத்த போது, 33 செல்போன்கள், 12 லேப்-டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள், கீ-போர்டு, மேஜிக் பேனா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து நிறுவன மேலாளர் ராஜேஷ் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபியிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு (21), பூந்தமல்லி தேவதாஸ் நகரைச் சேர்ந்த திவாகர் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். 2 பேரும் தாங்கள் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.