நான் வெற்றி பெற்றால் 2 முக்கிய விஷயம் நடக்கும்; டிரம்ப் உறுதி

நான் மீண்டும் வெற்றி பெற்றால் 2 முக்கிய விஷயங்கள் நடக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில், டிரம்ப் இந்த தேர்தல் குறித்து கூறுகையில், நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், ஈரான் நம்முடன் முதலில் ஒப்பந்தம் மேற்கொள்ளும்.

ஏனெனில் அவர்களின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பெருமளவு சரிந்துவிட்டது. மேலும் மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை கொண்டுவர முயற்சிகள் நடக்கும் என்று கூறியுள்ளார்.

அடுத்தவாரம் ஐக்கிய அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்த நிகழ்வை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்குகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா மத்தியஸ்தராக இருந்தது.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன.

இருப்பினும், கடந்த 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.