கோவில் மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்

ஈரோடு: முறைகேடாக கோவில் மின்இணைப்பை பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, நிர்வாக குழு மூலமாக மின்வாரியத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு பயன்படுத்தி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் கோவிலின் மின் கட்டணம் கடந்த சில மாதங்களாகவே அதிகமாகவே வந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகிகள் யாரேனும் கோவில் மின் இணைப்பை தவறாக பயன்படுத்துகிறார்களா? என்று பார்வையிட்டுள்ளனர்.

அப்போது கோவில் அருகில் செயல்படும் கடைகளை சேர்ந்தவர்கள் முறைகேடாக கோவிலில் இருந்து மின் இணைப்பை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது 2 கடைக்காரர்கள் கோவில் மின் இணைப்பை பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு, மின் இணைப்பையும் துண்டித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.