வரும் ஜூலை மாதத்தில் 25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்; மத்திய அமைச்சர் தகவல்

ஜூலைக்குள் தடுப்பூசி... வரும் ஜூலை மாத வாக்கில் நாட்டில் 20 முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

சண்டே சம்வாத் என்ற பெயரில் ஞாயிற்றுக் கிழமை தோறும் சமூகவலைதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று பதிலளித்த அவர் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்னர் 40 முதல் 50 கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

அதன் மூலம் 20 முதல் 25 கோடி பேர் தடுப்பூசி பயனை பெறுவார்கள் என்று அவர் கூறினார். முதலில் அரசு-தனியார் மருத்துவர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அவர் மாநிலங்கள் அதற்காக, ஊராட்சி ஒன்றிய அடிப்படையிலான முன்னுரிமைப் பட்டியலை அளிக்க வேண்டும் என்றார்.

தடுப்பூசியை வெற்றிகரமாக போடும் திட்டத்திற்காக கொரோனா குறித்த நோய் எதிர்ப்பு தரவுகளை அரசு திரட்டி வருவதாக ஹர்ஷ வர்தன் கூறினார். இதற்காக நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை மத்திய அரசே நேரடியாக வாங்கி, அது பயனாளர்களிடம் சென்று சேருவதை கண்காணிக்கும் என அமைச்சர் கூறினார். வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பை தூண்டும் விதமாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அவை பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

ரஷ்ய தடுப்பூசியான Sputnik-V-ன் இறுதி கட்ட சோதனையை இந்தியாவில் நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றை விரைவாக கட்டுப்படுத்த டபுள் டோசை விட சிங்கிள் டோஸ் தடுப்பூசிதான் சிறந்தது என்று மற்றோர் கேள்விக்கு பதிலளிக்கையில் ஹர்ஷ வர்தன் கூறினார். அதே நேரம் எதிர்பார்க்கப்படும் நோய்தடுப்பு சக்தியை பெற டபுள் டோஸ் தேவைப்படும் என அவர் விளக்கம் அளித்தார்.