கனமழையால் வவுனியாவில் 275 ஏக்கள் நெற்பயிர்கள் பாதிப்பு

நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன... வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2 குளங்கள் உடைப்பெடுத்து உள்ளதுடன், அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் உருவாகிய ‘புரேவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து வருகின்றது.

கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளவை எட்டிய நிலையில் மேலதிக நீரை வெளியேற்றி வருகின்றது.

இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் மற்றும் நாம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்பட்டுள்ளமையால், அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மேலும், இலுப்பைக்குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும், ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.