வட இந்தியாவில் 3 நாட்களில் 2-வது முறையாக நிலடுக்கம்

புதுடெல்லி: அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலநடுக்கம் வட இந்தியாவில் வலுவாக உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் அவற்றை விட்டு மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்த நிலையில் நேபாளத்தில் நேற்று மாலை 4.14 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவிலானது , கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதே பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கி.மி. தொலைவில் இதன் மையப் பகுதி அமைந்திருந்தது.

இந்நிலநடுக்கம் டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் உட்பட வட இந்தியாவில் வலுவாக உணரப்பட்டது. டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதனால் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை விட்டு மக்கள் அலறியடுத்து வெளியே ஓடி வந்தனர்.