மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைப்பு; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் படம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த கல்வி ஆண்டில் குறைவான நாட்களே உள்ளதால் அனைத்து பாடங்களையும் கற்பித்தால் மாணவர்களுக்கு கல்வி சுமை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு நிபுணர் குழு மூலம் படக்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.

சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.